உள்ளாட்சித் தேர்தல்.. உத்தேச கால அட்டவணை ஹைகோர்ட்டில் தாக்கல்.. தீர்ப்பு விரைவில்
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தேச அட்டவணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் உத்தேச அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததுடன், டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மே 14-ம் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
எனினும் குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்று திமுகவின் ஆர்எஸ். பாரதி வேறு ஒரு வழக்கை தொடர்ந்தார், இந்த வழக்கில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் பாடம் நாராயணனும் மனுதாரராக இணைந்தார்.
இந்த மனு விசாரணையின் போது மாநில தேர்தல் ஆணையம் இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தேசப் பட்டியலை அளித்துள்ளது. சீலிடப்பட்ட கவரில் அளிக்கப்பட்டுள்ள அந்த அட்டவணையில் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடுவது முதல் பிரதிநிதிகள் பதவியேற்பு வரையிலான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்ற பார்வைக்கு மட்டுமே வைக்கப்படுவதாகவும், இதனை மனுதாரர்களுக்கு அளிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அநேகமாக இந்த வழக்கில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அல்லது ஆகஸ்ட் 7ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications