சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு நீதிபதியை மாற்றி இருப்பது குழப்பமாக இருக்கிறது - கருணாநிதி
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு நீதிபதியை மாற்றியிருப்பதை பார்க்கும்போது சற்று குழப்பமாகத்தான் இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு அமர்வில் ஆரம்பத்தில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் முதன்மை நீதிபதியாகவும், அவருக்கு துணையாக நீதிபதி அகர்வாலும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கடைசியாக 23-11-2015 அன்று விசாரணை நடைபெற்ற போது, மேல்முறையீட்டின் இறுதி வாதத்தைக்கேட்பதற்கான தேதி ஜனவரி 8-ந் தேதி நிர்ணயிக்கப்படும் என்றும், அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விசாரணை நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தன.

1991-1996-ம் ஆண்டுகளில், தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 1996-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்குதான் கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் நடந்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வில் ஜனவரி 5 துவங்கி மார்ச் 11 வரை வழக்கு நடைபெற்றது.
11-5-2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் கூட்டல் கணக்கில் தவறு செய்துள்ளதை எடுத்துக்காட்டி, பிழையான கூட்டல் கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று கோரித்தான் கர்நாடக மாநில அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து அந்த வழக்குதான் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் 7-1-2016 அன்று இந்த வழக்கு விசாரணை குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், நீதிபதி ஆர்.கே. அகர்வால் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவராய் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணை தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்த முக்கியமான வழக்கில் நீதிபதி மாற்றம் என்பது வக்கீல்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கிக்கிடப்பதால், நீதிபதிகளுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை 8-1-2016 அன்று நடைபெறாது என்றும் உச்ச நீதிமன்றப் பதிவுத் துறை இந்தத் தகவலைத் தெரிவித்திருப்பதாகவும் செய்தி வந்தது.
எதற்காக 8-ந் தேதி விசாரணைக்காகப் போடப்பட்டிருந்த வழக்கினை நீக்கினார்கள்? பிறகு எதற்காக அதே நாளில் அந்த வழக்கினைச் சேர்த்தார்கள்? முதலிலே இரண்டு குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கினை விசாரிப்பார்கள் என்று அறிவித்து விசாரணையையும் தொடங்கினார்கள். பிறகு தற்போது திடீரென்று ஏன் ஒரு நீதிபதியை மாற்றியிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் பார்க்கும்போது சற்றுக்குழப்பமாகத்தான் இருக்கிறது.
இருந்தாலும், சட்ட நெறிமுறைகளின் தலைமைப்பீடமான உச்ச நீதி மன்றம் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நடவடிக்கைகளை சட்ட ரீதியாகவே செய்திருக்கும் என்பதிலும், சட்டத்தின் வழிமுறைகளில் எந்த முனையிலிருந்தும் எவ்விதத் தலையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்காது என்பதிலும், நீதியின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கெல்லாம் நம்பிக்கை இருக்கவே செய்கிறது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications