சரண் அடைந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கைது செய்யாமலேயே விசாரிக்கும் போலீஸ்
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் போலீசில் சரண் அடைந்த தொழில் அதிபர் தீனதாயளனை கைது செய்யாமல் தினமும் காலையில் இருந்து இரவு வரை விசாரணை நடத்தப்பட்டு வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பங்களாவில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் தீனதயாளன் ஏராளமான பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். தீனதயாளனின் பங்களாவில் கடந்த 31, 2, 3 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் 71 கற்சிலைகளும், 41 உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 75 பழங்காலத்து ஓவியங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக குமார், மான்சிங், ராஜாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தீனதயாளன் தலைமறைவானார்.
அவரை விசாரணைக்கு வருமாறு கூறி போலீசார் அவரது பங்களாவில் சம்மன் ஒட்டினர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கிண்டியில் உள்ள சிலை கடத்தல் பிரிவு போலீசில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முன்னிலையில் அவர் சரண் அடைந்தார்.
போலீசார் அவரை கைது செய்யாமல் விசாரணை நடத்திவிட்டு மறுநாள் காலை வருமாறு கூறி அனுப்பிவிட்டனர். இதையடுத்து அவர் நேற்று மீண்டும் விசராணைக்கு வந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது.
தீனதயாளனை கைது செய்யாமல் தினமும் வரவழைத்து விசாரிப்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்ற நடைமுறை சட்டப் பிரிவு 41-ஏ-ன்படி குற்றவாளியை தினமும் வரவழைத்து 15 நாட்கள் வரை விசாரிக்கலாம். அந்த சட்டப்படி தான் தீனதயாளனிடம் விசாரித்து வருகிறோம். தினமும் காலை 9 மணி முதல் இரவு வரை விசாரித்து வருகிறோம். அவர் விசாரணையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
அவரிடம் விசாரணை நடத்தப்படும் விவரங்களை பதிவு செய்து அதை நீதிமன்றத்தில் சமர்பித்து சிலை கடத்தலில் அவருக்கு இருக்கும் தொடர்பை வெளிக் கொண்டு வந்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கிடையே தீனதயாளனின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து தொல்லியல் துறை நிபுணர்கள் நாளை சென்னை வருகிறார்கள். நாளை ஆய்வு முடிந்தவுடன் சிலைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.