சிறப்பு பயிற்சி மையத்தின் மீது மாவோயிஸ்டுகள் தாக்க திட்டம்... சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை குவிப்பு
ஈரோடு: சத்தியமங்கலத்தில் அதிரடிப்படை சிறப்பு பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தமிழக - கேரள எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படுவதால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தனிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே மங்கலப்பட்டு வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பவானிசாகர், ஆசனூர், கடம்பூர், தாளப்பாடி ஆகிய காவல்நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு படையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் பன்னாரி மற்றும் ஆசனூர் சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.