ராம்குமாருக்கு தையல் பிரிச்சாச்சு..!
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு தொண்டையில் போடப்பட்டிருந்த தையல் பிரிக்கப்பட்டு விட்டது. அவர் முழுமையாக குணமடைந்து விட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் சிக்கிய ராம்குமார் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். நள்ளிரவுக்கு மேல் போய் போலீஸ் படை ராம்குமாரைக் கைது செய்தது. அப்போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது, புகைப்படங்களும் வெளியாகின.

இதையடுத்து ராம்குமாரை நெல்லை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தையல் போடப்பட்டது. பின்னர் பயணத்திற்கு அவர் தயார் என்று டாக்டர்கள் கூறியதைத் தொடர்ந்து அவரை சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வந்தனர். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு அவர் குணமடைந்தார். இதையடுத்து அவரை புழல் சிறையில் போலீஸார் அடைத்தனர். அங்கு தனியான ஒரு பகுதியில் ராம்குமார் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது தொண்டையில் போடப்பட்டிருந்த தையலைப் பிரித்தனர். இதன் மூலம் முழுமையாக குணமாகியுள்ளார் ராம்குமார்.
தற்போது ராம்குமாருக்கு சிறையிலேயே மன நல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இறுக்கமான மன நிலையில் உள்ள ராம்குமார் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications