ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
ஆர்.கே.நகரில் சி.ஆர்.சரஸ்வதியின் பிரசார வேன் மீது அழுகிய தக்காளி, செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக அம்மா கட்சி நட்சத்திர பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதியின் பிரச்சார வேன் மீது அழுகிய தக்காளி, செருப்பு, கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வின் இரு அணிகள் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஒருவித பதற்றமான சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை வினோபா நகரில் நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு தினகரனுக்கு ஆதரவாக சசிகலா அணியினர் பிரசாரம் செய்ய வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
சி. ஆர். சரஸ்வதி பிரச்சாரம்
அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை ஆதரித்து ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திறந்த ஜீப்பில் ஆர்கே நகர் மார்க்கெட் அருகில் சி.ஆர். சரஸ்வதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுசூதனன் ஆதரவாளர்கள்
அப்போது அங்கு இருந்த மதுசூதனன் ஆதரவாளர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார் என்று சொன்னீங்களே, ஆனா ஜெயலலிதாவை பிணமா தானே கொண்டு வந்தீங்க என்று கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய சரஸ்வதி, அங்கு இருந்து செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
தொடர்ந்து மேயர் பாசுதேவ் தெரு, வீராகுட்டி தெரு சந்திப்பில் பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அங்கு வந்தனர். இதனால் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோரை வேறு பக்கம் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் செல்லாமல் அங்கேயே இருந்தனர்.
அழுகிய தக்காளி வீச்சு
அப்போது மார்க்கெட்டிற்கு வந்த பெண்கள் சிலர் சி.ஆர்.சரஸ்வதியின் பிரசார வேன் மீது தக்காளிகளை வீசினர். திடீரென கற்கள், செருப்புகளை பலர் வீசினர். அதனை தொடர்ந்து சி.ஆர்.சரஸ்வதி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது நீங்களே இவ்வாறு செய்யலாமா? என ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்து சி.ஆர்.சரஸ்வதி கேட்டார். ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி வேன் மீது தக்காளி வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.