பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இனிமேல் பிச்சை எடுக்க முடியாது பாஸ்...!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எழில்முருகன் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த தலைமை செயலாளர், உள் துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006-ம் ஆண்டு இந்த கோர்ட்டில் தொடரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். பிச்சைக்காரர்கள் (ஜனத்) தொகையை பொறுத்து, மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுகிறது.
இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்கள், வழிபாட்டு தலங்களில் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருகிறோம்.
பிச்சை எடுப்பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டு இருந்தது.
எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், தகுந்த நடவடிக்கையை பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications