வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் முடங்கிய வர்த்தகம்
சென்னை: வங்கி ஊழியர்களின் ஒருநாள் போராட்டத்தால் நாடு முழுவதும் 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலைகள் முடங்கியது. வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாய்ப்பு இருந்தும், பெரும்பாலான ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இல்லாததால், ஏராளமானோர் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கிகள் சங்கங்கள் அறிவித்தபடி நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆர்பாட்டம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 25 சதவிகித ஊதிய உயர்வு கோரி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளிக்கப்படும் ஊதிய உயர்வை அறிவிக்கவில்லை என்று பணவீக்கத்தை கட்டுபடுத்த தவறிவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

கோவையில் ஆர்பாட்டம்
கோவை ரயில் நிலையம் அருகே பரோடா வங்கி முன் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
வேலை நிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில்
ஈரோடு மாவட்டத்தில் 40 கிளைகளை சேர்ந்த 2,100 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக காந்திஜி சாலையில் பேரணியாக வந்த ஊழியர்கள் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ரூ.200 கோடி அளவிற்கு வங்கி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய வர்த்தகம்
போராட்டம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் திறக்கப்பட வில்லை. வங்கிகள் திறக்கப்படாததால், காசோலை பரிவர்த்தனைகள், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.

மக்கள் ஏமாற்றம்
வங்கி மூடப்பட்டிருந்தாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வாய்ப்பு இருந்தும், பெரும்பாலான ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இல்லாததால், ஏராளமானோர் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஊழியர்கள் எச்சரிக்கை
வங்கி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வங்கி ஊழியர்கள் சங்கம் இல்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெறிச்சோடிய வங்கிகள்
இதனிடையே வேலைநிறுத்தம் காரணமாக ஊழியர்கள் இன்றி வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் தங்கள் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications