பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும்- போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வார்னிங்
பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று சிஐடியூவை சேர்ந்த சவுந்திரராஜன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களை அரசு உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று சிஐடியூவை சேர்ந்த சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனினும் அதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்துகளில் இருந்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டனர். இந்நிலையில் அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
15 ஆண்டுகால ஊதியம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கத்தினரை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் 15 ஆண்டுகால ஊதியத்தை ஒரே நேரத்தில் கேட்கிறார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெற்றிகரமாக போராட்டம்
இதுகுறித்து சென்னை தொமுச அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை நடத்தின. அப்போது சிஐடியூவை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது.
அரசு அழைக்க வேண்டும்
போக்குவரத்து தொழிலாளர்கள் 95% பேர் வேலைக்கு வரவில்லை. போக்குவரத்து கூட்டு குழுவில் 17 சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அரசு உடனே அழைக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் போராட்டத்தை தீவிரமாக்குவோம். ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னலுக்கு வருந்துகிறோம்.
10 பேருந்து கூட இயக்கவில்லை
பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னலுக்கு அரசுதான் காரணம். அமைதியான அறவழியில் தொடர்ந்து போராடுவோம். வன்முறை வழியில் போராடமாட்டோம். தற்காலிக ஓட்டுநர்களை பயன்படுத்துவது அபாயகரமானது. தமிழகம் முழுவதும் 10% பேருந்துகள் கூட இயக்கவில்லை என்றார் அவர்.