அச்சமூட்டும் இயற்கை: கடலூரில் வெந்நீர் ஊறுது.. சங்கரன்கோயிலில் சூறாவளி சுழன்றடிக்குது
நெல்லை: சங்கரன்கோயில் பகுதியில் திடீரென சுழன்றடித்த ஒருவகையான சுழல் காற்று அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் பெரிய அளவில் மழையில்லை.
நெல்லையின் மேற்குமாவட்டத்திலுள்ள சங்கரன்கோயிலிலும் வானம் மேகமூட்டத்தோடுதான் இருந்தது. ஆனால் நகரின் வெளிப்புற வயல் வெளியில் இன்று காலை அச்சமூட்டும் ஒரு காட்சியை சிலர் பார்த்தனர்.

இதுவரை, வெளிநாடுகளில் புயல் எப்படி சுழன்று செல்லும் என்பதை டிஸ்கவரி போன்ற சேனல்களில் மட்டுமே பார்த்திருந்த சங்கரன்கோயில் மக்களுக்கு அதேபோன்ற காட்சி தரிசனமானது.
வயல்வெளிக்கு அப்பால், மிகப்பெரிய காற்று சுழல் ஒன்று கிளம்பி அப்படியே பயணித்தது. அந்த சுழல் காரணமாக, காகிதம், குப்பை போன்ற பல பொருட்களும் வானில் தூக்கி வீசப்பட்டன. அவையும், வானில் ஆவேசமாக சுழன்றன. சிலர் இந்த காட்சியை செல்போன்களில் படம் பிடித்தனர்.
இந்த காற்றுக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது சங்கரன்கோயில் சுற்றுவட்டார மக்கள் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே சில தினங்கள் முன்பு கடலூர் அருகே கிணற்றில் இருந்து வெந்நீர் ஊற்று கொப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications