கோவையில் என்சிசி முகாமில் கல்லூரி மாணவி பலி.. மூச்சுத்திணறி மயங்கி விழுந்து பரிதாபம்
கோவையில் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
Recommended Video
கோவை: கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் என்.சி.சி. முகாமில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே உள்ள வண்டிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகள் ஹரிபிரியா. இவர் கோவை அரசு கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்.சி.சி. முகாம் நடந்து வருகிறது. தேசிய அளவில் நடைபெற்று வரும் இந்த முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில், தங்கள் கல்லூரி மாணவிகளுடன் ஹரிபிரியாவும் இந்த முகாமில் பங்கேற்றிருந்தார்.
நேற்று மாலை கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஹரிப்பிரியா அறைக்கு திரும்பியபோது திடீரென்று மூச்சு திணற ஆரம்பித்தது. இதனால் சற்று நேரத்திற்கெல்லாம் ஹரிப்பிரியா மயங்கி சரிந்து விழுந்தார். இதனை கண்ட அங்கிருந்த மாணவிகள் என்சிசி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து ஹரிப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஹரிப்பிரியா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடன் சற்று முன்னர்வரை விழாவில் பங்கேற்று சிரித்து பேசிக் கொண்டிருந்த ஹரிப்பிரியா, திடீரென உயிரிழந்ததை தாங்க முடியாமல் சக மாணவிகள் கதறி அழுதனர்.