மெரீனா கடலில் மூழ்கி கல்லூரி மாணவி பரிதாப பலி – கரை ஒதுங்கியது உடல்
சென்னை: சென்னை மெரீனா கடலில் மூழ்கி கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவரது நண்பர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக். இவர்கள் இருவரும் தண்டலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் படித்து வந்தனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இருவரும் மெரீனா கடற்கரைக்கு வந்தனர். கடல் நீரில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கோடீஸ்வரி கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட அசோக், கோடீஸ்வரியை காப்பாற்ற கடலுக்குள் சென்றபோது, அவரும் அலையில் சிக்கிக் கொண்டார்.
இருவரும் அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த வேறு சிலர், இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால், அசோக்கை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. கோடீஸ்வரியை மீட்க முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மயங்கிய நிலையில் இருந்த அசோக்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அலையில் இழுத்துச் செல்லப்பட்ட கோடீஸ்வரியின் உடலை மீட்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் உழைப்பாளர் சிலை அருகே கோடீஸ்வரியின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கோடீஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications