ஆசிரியர் சில்மிஷத்தால் தீக்குளித்த விருதுநகர் பள்ளி மாணவி மரணம்
விருதுநகர்: ஆசிரியர் சில்மிஷத்தால் விருதுநகரில் தீக்குளித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த சந்திரசேகர் என்பவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
மேலும் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் ஆசிரியரை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் அம்மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து ஆசிரியர் சந்திரசேகர் சில்மிஷம் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சந்திரசேகரை கைது செய்தனர். அவர் மீது சிறுமி பலாத்காரம், பெண் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications