கடலூரில் பயங்கரம் - கல்லூரி வாசலிலேயே மாணவி படுகொலை
கடலூர்: கடலூரில் உள்ள பிரபல புனித ஜோசப் கல்லூரியில் படித்து வந்த மகாலட்சுமி என்ற மாணவி, கல்லூரி வாசலிலேயே கழுத்தை அறுத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
அவரைக் கொலை செய்த நபர் தப்பி விட்டார். கல்லூரி வாசலில் கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர் மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து இன்று மதியம் வெளியே வந்துள்ளார்.
அப்போது திடீரென அங்கு வந்த ஒரு நபர் மாணவியை நெருங்கி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் மகாலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த நபர் தப்பி விட்டார். அவர் மகாலட்சுமியின் உறவினர் என்று கருதப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.