சிபிஎஸ்இயின் பொறுப்பற்றதனத்தால் நாடு முழுவதும் பெரும் குழப்பத்துக்குள்ளாகும் மாணவர்கள்!
நீட் தேர்வு சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மையால் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு சிபிஎஸ்இயின் பொறுப்பற்றதனத்தால் நாடு முழுவதும் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மருத்துவப்படிப்புக்கான தகுதித் தேர்வில் தமிழகத்தில் இருந்து வெறும் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். இதற்கு நீட் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதே காரணம் என கூறப்பட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
196 மதிப்பெண்கள்- உத்தரவு
அந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய தரவரிசைப்பட்டியல்
மேலும் மருத்துவ கலந்தாய்வுக்கு புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிட்டு மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும் எனறும் ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ரேங்க் லிஸ்ட்டில் மாற்றம்
இந்நிலையில் உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பால் தேசிய அளவில் வெளியிடப்பட்ட ரேங்க் லிஸ்ட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் நாடு முழுவதும் ஏற்கனவே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதிகளவு இடம் கிடைக்கும்
தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்படும்போது தமிழக மாணவர்கள் அதிகளவு ரேங்க் லிஸ்ட்டில் இடம்பிடிப்பார்கள். இது நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுரிகளில் சிக்கலை ஏற்படுத்தும்.
நாடு முழுவதும் குழப்பம்
இதனால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தமிழகத்திலும் நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவர்கள் பணம் கட்டியும் மேலும் தங்களின் கனவுகளை சிதைத்து மற்ற படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர்.
சிபிஎஸ்இ பொறுப்பற்றதனம்
உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவால் தமிழில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் மகிழ்ச்சியடைந்திருந்தாலும், வெளி மாநில மாணவர்கள் வயிற்றில் இந்த தீர்ப்பு புளியை கரைத்துள்ளது. சிபிஎஸ்இ முறையாக வினாத்தாளை தயாரிக்காத ஒரே காரணம், சிபிஎஸ்இயின் பொறுப்பற்றதனத்தால ஒட்டு மொத்த இந்திய மாணவர்களும் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.