பயணிகளுக்கு மாணவர்கள் தொந்தரவு அளித்தால் கைது நடவடிக்கை பாயும்.. காவல்துறை கடும் எச்சரிக்கை
பஸ் டே கொண்டாடக்கூடாது என போலீசார் மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: பேருந்தில் பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல, தடையை மீறி பஸ் தினம் கொண்டாடினால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு பிற்பகல் 3 மணி அளவில் விவேகானந்தர் இல்லத்திலிருந்து ஆவடி நோக்கி சென்ற ஒரு மாநகர பேருந்தினை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மடக்கினர். பேருந்தின் உள்ளேயும், மேலேயும் ஏறிக்கொண்டு ஆட்டம் போட்டனர். சில பைக்குகளில் ஏறிக் கொண்ட மாணவர்கள் பேருந்தின் முன்னால் வழிமறித்து அச்சுறுத்தியவாறே சென்றனர்.
பேருந்தினுள் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்களுக்கும் இடையூறு செய்தனர். இதில் பேருந்தில் இருந்த சில பயணிகளையும் மாணவர்கள் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் கல்லூரி மாணவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது 3 பேர் மட்டும் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்கள் 19 வயதுடையவர்கள் என்பதும், பஸ் டே கொண்டாடப்பட்டதாக இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரியவந்தது. மற்றவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில், அவர்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மேலும் 10 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்தின் முன்னால் வழிமறித்து சென்ற 5 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தடையை மீறி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடக்கூடாது என காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் பேருந்தை அபகரித்து பயணிகளுக்கு எந்த வகையிலாவது தொந்தரவு செய்தால் அத்தகைய மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.