40 கல்லூரிகளின் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரண்டனர்... சென்னையை அதிர வைக்கும் போராட்டம்!
சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் மாணவர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் தொடங்கி, மெரீனா வரை நடக்கும் இந்தப் போராட்டம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீது அபார நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள் முதல் முறையாக வெகுண்டெழுந்துள்ளனர், தமிழரின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைக்கு எதிராக.
குறிப்பாக எங்கிருந்தோ வந்த பீட்டா என்ற அமைப்புக்கு ஆதரவாகவும், தன் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நீதி அமைப்பும், மத்திய அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருவது தமிழ் மக்களின் பொறுமையைச் சோதித்துவிட்டது.
இன்று எந்த அரசியல் தூண்டுதலும் இல்லாமல், தன்னெழுச்சியாக ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. உணவு உறக்கம் மறந்து விடிய விடிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் மக்கள்.
இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றால் மிகையல்ல. தங்கள் கலாச்சாரம், பண்பாட்டு மீட்டெடுப்புப் போராட்டமாக இதனை மக்கள் மாற்றியுள்ளனர் என்றால் மிகையல்ல.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தடை நீக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு உடனடியாக நடத்தப்பட வேண்டும், பீட்டா என்ற அமைப்பு இந்தியாவிலிருந்து துரத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு உறுதியாக நிற்கின்றனர். இதை வலியுறுத்தி இன்று மட்டும் 40-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்னையில் ஒன்று திரண்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் சென்னை விருகம்பாக்கத்திலிருந்து கடற்கரை வரை பிரமாண்ட பேரணி நடத்தி, ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தப் போராட்டம் இன்று காலை விருகம்பாக்கத்தில் தொடங்கியது. கடற்கரையை பிற்பகலுக்குப் பிறகு அடையவிருக்கிறது. கடற்கரையில் நேற்றிலிருந்து ஜல்லிக்கட்டு ஆதரவாகப் போராடி வரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தைத் தொடரவிருக்கிறது.
இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை இதற்கு முன் தமிழகம் கண்டதில்லை என்பதால், இந்தப் போராட்டம் ஒரு வரலாற்று நிகழ்வாகவே மாறியுள்ளது என்றால் மிகையல்ல.