ரயிலில் ரிசர்வேஷன் செய்வது எப்படி.. காரைக்குடி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் காரைக்குடி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, பயணச்சீட்டு பெறும் இடம், முன்பதிவு அலுவலகம், பயணிகள் ஓய்வு அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டிகள், ரயில் என்ஜின், இரண்டாம் வகுப்பு பயணப் பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

முன்பதிவு செய்யும் முறைகள், ரத்து செய்யும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. காரைக்குடிக்கு வந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

ரயில் நிலையத்தின் தினசரி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மாணவர்களுடன் பட்டதாரி ஆசிரியர்கள் ஜாக்குலின் கனிமொழி மற்றும் கோமதி ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications