வைகோ நாடாளுமன்றம் செல்ல மக்கள் ஆதரிக்க வேண்டும்: மாணவர்கள் கோரிக்கை
திருச்சி: நாடாளுமன்றத்தின் புலி வைகோ என்று திருச்சியில் நடந்த மாணவர்களுக்கான ம.தி.மு.க.வின் பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் புகழ்ந்தனர்.
'நாடாளுமன்றத்தில் வைகோ" எனும் தலைப்பில் ம.தி.மு.க. மாணவர் அணி தமிழகம் முழுக்க நடத்தி வந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று காலை திருச்சி தேவர் மஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே மாணவர்களின் அனைத்து செல்போன்களையும் நிறுத்தி வைக்குமாறு வைகோ கேட்டுக்கொண்டார். கட்சிக் கொடிகள் கட்டப்படவில்லை. பாவேந்தர் பாரதிதாசனின் பொன்மொழிகள் மேடைகளில் எழுதப்பட்டிருந்தன.
இவ்விழாவில் பேசிய மாணவர்கள், ''13 முறை தனிமனித மசோதாவை கொண்டுவந்த முதல் மனிதர் வைகோ. ஈழமக்களுக்கான நெருக்கடி காலங்களில் என் இனத்திற்காக தூக்கு தண்டனையை ஏற்க தயார் என அப்போது ராஜுவ் காந்தியிடம் சொன்னவர். இந்திரா காந்தியால், காங்கிரஸின் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ ஒருவருக்கு சமம் என பாராட்டு பெற்றவர் வைகோ.
விடுதலை புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டபோதும் எங்கள் வைகோ மட்டும்தான், நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்றார். அந்தளவுக்கு தைரியமான மனிதர் வைகோ.
இந்திய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டு கால வரலாற்றில், 24 வருடம் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வீர உறையாற்றியவர்.

வைகோ நாடாளுமறத்தின் புலி. டெல்லியின் அதிகாரத்தை அடக்கவும், தமிழனத்திற்கு துரோகம் இழைக்கும் டெல்லிக்கு பாடம் கற்பிக்கவும் வைகோ தலைமையில் பெரும் படை டெல்லி நாடாளுமன்றத்திற்கு அணி வகுக்க பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வைகோ மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் நாள்தான், நாடாளுமன்றம் மறுமலர்ச்சி பெரும் நாள்" என்று பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வைகோ, மல்லை சத்யா, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் மலர் மன்னன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சேரன் உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications