இந்தியாவின் எதிர்காலத் தூண்களுக்கு ‘வாழ’த் தெரியவில்லை... அப்போ நம்ம கல்விமுறை "பெயில்"?
சென்னை: ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' ஏனோ இந்தப் பழமொழியை படிப்பதோடு காற்றில் பறக்க விட்டுவிட்டு, கல்வி ஒன்றே வாழ்க்கை, அதில் தோற்றால் வாழவேக் கூடாது என தவறான முடிவுடன் தற்கொலையை நாடி ஓடுகின்றனர் இன்றைய மாணவர்கள்.
குழந்தைகளுக்கு உலக அறிவு தேவை, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத் தேவையான தைரியத்தையும், துணிச்சலையும் தரும் என்றே கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டன. இதையே பாடப்புத்தகத்தில் கஜினி முகம்மதுகளும் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
ஆனால், அவற்றை மாணவர்கள் சரியாக புரிந்து கொள்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தற்கொலை செய்திகள்...
தினமும் செய்திகளில் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை, ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் தற்கொலை, பரீட்சையில் பெயிலானதால் தற்கொலை என மாணவ மொட்டுக்களின் மரணச்செய்தி நிரம்பிக் கிடக்கிறது.

கல்விமுறை பெயில்...
ஏன் இந்த நிலை என்று யோசித்தால், தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் மீது மட்டும் குறை சொல்ல இயலாது. அவர்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை சரிவரக் கற்றுத்தர தெரியாமல் நாம் பெயிலானது தெரியவருகிறது.

கள்ளக்குறிச்சி மாணவிகள் மரணம்...
தற்போது கள்ளக்குறிச்சி மாணவிகள் மரணம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவோ போராடிப் பார்த்து, ஏமாற்று வேலையின் முகமூடியைக் கிழிக்க தங்களது இன்னுயிரையே தரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் அம்மூன்று மாணவிகளும்.

சரியானதல்ல...
ஆனால், தற்கொலை மூலம் மட்டுமே மற்றவர்களது கவனத்தைத் திருப்ப முடியும் என்ற அம்மாணவிகளின் முடிவு சரியானது தானா? தற்கொலைகளால் சமூகத்தை மாற்ற முடியுமா?

போராடும் குணம் இல்லையே...
நமது தாத்தாக்கள், ஏன் பாட்டிகளும் கூட, யாரும் தற்கொலை செய்து கொண்டு இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கித் தந்துவிடவில்லையே. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடித் தானே வென்றார்கள். அந்த வழியில் வந்த நாம் தற்போது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாமா?

கத்தி...
விஜய் நடித்த கத்தி படத்தில் இது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தங்களது பிரச்சினைகளை மக்கள் முன் கொண்டு செல்வதற்காக 5 முதியவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். தற்போது இம்மாணவிகளின் மரணமும் நமக்கு அதையே சொல்கிறது.

இது தீர்வல்ல...
தங்கள் இன்னுயிரை அளித்து மற்ற மாணவிகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற நினைத்த அம்மாணவிகளின் முயற்சி மிகப்பெரியது தான். ஆனால், எதற்குமே தற்கொலை ஒரு தீர்வல்ல இதனை இளைய தலைமுறை மறந்து வருகிறதே என்பது மிகவும் கசப்பான உண்மை.

சுயநல முடிவு...
இம்மாணவிகள் மட்டுமின்றி செல்போன் வாங்கித்தரவில்லை, பரீட்சையில் பெயில் என எதற்கெடுத்தாலும் மாணவர்களின் மனக்கண்ணில் முதலில் தெரியும் தீர்வு தற்கொலையே. ஆனால், பிரச்சினைகளில் இருந்து தாங்கள் மட்டும் தப்பித்துக் கொள்ளும் ஒருவகை சுயநலமான முடிவே இது.

மனநல பயிற்சிகள்...
பலாத்காரங்களைத் தடுக்க முறையான பாலியல் கல்வி வேண்டும் என சிலர் போராடி வருகின்றனர். அதேபோல், நம்பிக்கையுடன் வாழ மாணவர்களுக்கு மனநலப் பயிற்சிகளும் பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும்.

எல்லோரும் வெற்றியாளர்களே...
அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தி மாணவர்களின் ஆரோக்கியத்தில் செலுத்தும் கவனத்தை, மனநல முகாம்கள் நடத்தி அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பதில் செலுத்த வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் முதலில் வருபவர்களுக்கு மட்டுமல்ல, கடைசியில் வருபவருக்கும் வேறு களத்தில் கோப்பைகள் காத்திருக்கிறது என்பதை நமது பள்ளிக்கூடங்கள் எடுத்துக்கூற வேண்டும்.

வாழ்க்கைப்பாடம்...
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறாயா என்பது தான் வாழ்க்கை, முடக்கம் எதற்கும் தீர்வல்ல என்பதை நமது ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். தோல்விகளை உரமாக்கி வெற்றி மலர் பறித்த தலைவர்களின் வாழ்க்கையை வாழ்க்கைப்பாடமாக அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.

போராட்டகுணம்...
‘பத்தாவது முறை வீழ்ந்தவனை பூமி முத்தமிட்டுச் சொன்னது ஒன்பது முறை எழுந்தவல்லவா நீ'. இந்த தன்னம்பிக்கையை, போராட்ட குணத்தை நம் வருங்கால சந்ததிகளுக்கு கற்றுத்தர வேண்டியது நமது தலையாய கடமைகளுள் ஒன்று. இல்லையெனில் தன்னம்பிக்கையில்லாத இந்தியாவின் தூண்களை உருவாக்கிய அவப்பெயருக்கு நாம் ஆளாக வேண்டி வரலாம்.












Click it and Unblock the Notifications