7 தமிழரை விடுதலை செய்யக் கோரி மார்ச் 3-ல் வகுப்பு புறக்கணிப்பு - மாணவர் கூட்டமைப்பு
சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மார்ச் 3-ம் தேதி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், பிரபாகர், ஜோ பிரிட்டோ, செம்பியன், இளையராஜா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையிலும், இந்தியாவிலும் உலக நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களிடம் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவோரை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமையன்று சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே அரசியல் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பின்னர் மார்ச் 3-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications