தமிழகம் முழுவதும் பொங்கல் கோலாகலம்.. ஜல்லிக்கட்டு நடக்குமா? தீவிரமடையும் போராட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பதால் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்காததால், ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலூர், தூத்துக்குடி உட்பட மாநிலம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம், பேரணி, மனிதச் சங்கிலி போன்ற போராட்டங்களில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
இருசக்கர வாகன பேரணி:
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணி, காளை மாடு சிலை பகுதியில் முடிவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
மாணவ, மாணவிகள் பேரணி
மதுரை தமுக்கம் மைதானத்தில் திரண்ட மாணவ, மாணவிகள் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். அப்போது ஜல்லிக்கட்டு பற்றி பேச பீட்டா அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என அவர்கள் கூறினர். உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.
வேலூரில் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வேலூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த மாணவ அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அப்பதோது போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடியிலும் மாணவர்கள் பேரணி நடத்தினர்.












Click it and Unblock the Notifications