முள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை
சென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரேகார்பன் எடுக்கும் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்திய நிலையில் கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியர் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் நடைமுறை வழக்கப்படியே கையெழுத்திடப்பட்டதாகவும், மக்களின் கருத்தின் அடிப்படையிலேயே திட்டம் முழுவதம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும் திட்டத்தை செயல்படுத்த மும்முரமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பச்சை தமிழகம் கட்சித் தலைவர் உதயகுமார் பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தைச் சுற்றி ஆயிரம் போலீசாரை நிறுத்தி, மக்கள் போக்குவரத்தை தடை செய்து, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை உள்ளே அனுப்பி ஹைட்ரோகார்பன் எடுக்கும் வேலைகளை அரசுகள் செய்யத் துவங்கியிருக்கின்றன. முள்ளிவாய்க்கால், இடிந்தகரை போன்ற இடங்களில் தமிழர் அனுபவித்த கொடுமைகள் இன்னும் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில், இந்த பட்டியலில் சேர்கிறது கதிராமங்கலம். என்ன செய்யப் போகிறோம் தோழர்களே? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.