சேலம்: சீட்டு விளையாடிய பணத்தை ஆட்டையைப் போட்ட சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
சேலம்: சேலத்தில் சீட்டு விளையாடிய போது ஒன்றரை லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தலைமறைவான போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையம் திருமண மண்டபத்தில் சிலர் சீட்டு விளையாடினர். இவர்களுடன் சேலம் டவுன் குற்றப்பிரிவு சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசனும் சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சேலம் டவுன் உதவி கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் இந்த திருமண மண்டபத்திற்கு வந்து விசாரித்தனர்.
போலீசார் திருமண மண்டபத்திற்கு வந்து இருப்பதை அறிந்த சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சீட்டு ஆடியவர்கள் வைத்து இருந்த ரொக்கப்பணம் ஒன்றரை லட்சத்தை எடுத்துகொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி பொதுமக்கள் சிலர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதை விசாரிக்க சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இதன் பேரில் துணை கமிஷனர் பாபு தலைமையிலான போலீசார் விசாரித்து 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அப்போது இவர்கள் சீட்டு விளையாட வைத்து இருந்த ரொக்கப்பணத்தை சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் எடுத்து சென்று விட்டார். இந்த தொகையை வாங்கி தாருங்கள் என புகார் செய்தனர்.
இதன் பேரில் தற்போது விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் சப்.இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சேலம் சரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.நேற்று இரவு இவர் திடீரென ‘சஸ்பெண்டு' செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சேலம் போலீஸ் கமிஷனரும், சேலம் சரக டி.ஐ.ஜியுமான அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications