போலி பத்திரப் பதிவு செய்த வழக்கில் நீலாங்கரை சார் பதிவாளர் தாமு அதிரடி கைது
போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: போலியாக பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக நீலாங்கரை சார் பதிவாளர் தாமு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் 48 மணிநேரத்தில் கைது செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்ட நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த சக்திகுமார் என்பவர் தன்னுடைய குடும்ப சொத்துகளை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவரது சகோதரி சாவித்திரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த போது, போலி ஆவணங்கள் மூலம் பத்திரபதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போலி பத்திரபதிவுக்கு நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சார் பதிவாளர் தாமு மற்றும் போலி பத்திரபதிவுக்கு உடந்தையாக இருந்த நபர்களை 48 மணி நேரத்திற்குள் கைது செய்யும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில் தாமுவை போலீசார் இன்று கைதுசெய்துள்ளனர். தாமுவிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் வெளிவரக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு திருவான்மியூரை சேர்ந்த சுமிதா (40) என்பவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள தந்தையின் சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து சுமிதாவின் தாயும், சகோதரனும் அபகரித்துள்ளனர். இதற்கும் நீலாங்கரை சார்பதிவாளர் தாமு உடந்தையாக இருந்தது உள்பட பல புகார்கள் அவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications