மதிமுக, பாமக கட்சிகள் செய்த உதவிகளை மறக்க மாட்டோம்: சுப.உதயகுமார்
இடிந்தகரை: கூடங்குளம் பிரச்சினையில் எங்களோடு கை கோர்த்துப் போராடிய மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.ம.க உள்ளிட்ட கட்சிகள், எங்களுக்கு செய்த உதவிகளை நாங்கள் மறக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசியல் கட்சிகளை விமர்சித்து, அவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்து கொள்வதிற்கில்லை என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு சில நாளேடுகளில் வெளிவந்திருக்கிறது. இது தவறான செய்தி.
எங்களோடு கைகோர்த்துப் போராடிய ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.ம.க. போன்ற கட்சிகள் மக்கள் விரோத பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றனவே, கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேச மறுக்கின்றனவே என்று வருந்துவது உண்மைதான்.
ஆனால் அவர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை , செய்த உதவிகளை நாங்கள் ஒரு நாளும் மறக்க மாட்டோம். தமிழகத்தில் இயங்கும் பல்வேறு கட்சிகளும் இன்னும் உறுதுணையாகவே இருக்கின்றன. அவர்களோடு இணைந்து செயலாற்றவே விழைகிறோம். நன்றி.' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.