வாட்ஸ் அப்பில் மிரட்டல் பேச்சு.. யுவராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சுப.வீ மனு!
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்துள்ள யுவராஜின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் சனிக்கிழமை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கைகளிலிருந்து தொடர்ந்து தப்பி வந்த யுவராஜ், கோகுல்ராஜ் கொலை தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார்.
பின்னர் மாறுவேடத்தில் வந்து வந்து சிபிசிஐடி போலீஸாரிடம் சரணடைந்தார் யுவராஜ். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
தற்போது அதே பாணியில் அண்மையில் ஒரு வாட்ஸ்அப் குரல் பதிவை வெளியிட்டுயிருந்தார். அந்த ஆடியோவில் ராம்குமார்தான் குற்றவாளி என்றும், ராம்குமார் ஒரு தலித் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திரவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் சனிக்கிழமை காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் திமுக தலைவர் கருணாநிதி மீதும், விடுதலைச் சிறுத்தைகள் தொல்.திருமாவளவன் மீதும், தன் மீதும் எச்சரிக்கை விடும் தோனியில் யுவராஜ் பேசியதோடு, கொலை மிரட்டலையும் விடுத்திருந்தார். சமூக அமைதியைச் சீர்குலைக்கக் கூடிய இத்தகைய செயலுக்காக சட்டப்படி யுவராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.