ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை நேரில் கேட்க பெங்களூர் நீதிமன்றம் வரும் சு.சுவாமி?!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவும் சுப்பிரமணிய சுவாமியும் ஒரே இடத்துக்கு வருவதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளாக நடை பெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தமிழக அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை பெங்களூரின் பக்கம் திருப்பியுள்ளது.
தீர்ப்பு வெளியாகும் நாளில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி டி'குன்ஹா உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருடைய வசதிக்காக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளில் சுப்பிரமணியன் சுவாமி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீர்ப்பின் விவரங்களை நேரில் கேட்டறிந்து அடுத்தகட்ட முடிவை எடுக்க இருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
வழக்கின் தீர்ப்பை பொறுத்து உச்ச நீதிமன்றம் வரை செல்லவும் அவர் தயங்கமாட்டார் என்கின்றனர் சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவாளர்கள்.
அதேசமயம் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்துக்கு வருவது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று பெங்களூர் போலீஸாரிடம் விசாரித்தபோது,
இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் இருவரும் ஒரே இடத்துக்கு வருவது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
அவசியம் ஏற்பட்டால் இருவருக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செப்டம்பர் 25-ம் தேதி இறுதி முடிவெடுப்போம்'' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.