ஆளுநர் மாளிகையில் இருந்து பின்வாசல் வழியாக தப்பி ஓடிய சு.சாமி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் வித்தியாசாகர் ராவை இன்று மாலை சந்தித்து பேசினார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் மாளிகையின் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழக அரசியலில் தற்போது நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது குறித்த முடிவை எடுக்க முடியாமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருந்து வருகிறார்.
இதற்கிடையே பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். இதையடுத்து சுமார் 6.30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பரபரப்பான அரசியல் சூழலில் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை சந்தித்தது முக்கிய நிகழ்வாக கருதப்பட்டது. இதனால் ஆளுநர் மாளிகை முன்பு ஏராளமான பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். ஆளுநருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றுவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.