இந்த டீல் எப்பூடி? ப.சி. மகன் கா.சி.க்கு காரைக்குடி ....சு.நா. மகன் ஜெ.சி.க்கு சிவகங்கை....
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் எதிரும் புதிருமாக இருந்து வந்த ப.சிதம்பரமும் சுதர்சன நாச்சியப்பனும் இப்போது மகன்களுக்காக 'இணைந்த' கரங்களாக கை கோர்த்துவிட்டனர். சட்டசபை தேர்தலில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கை காரைக்குடி தொகுதியிலும் சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெயசிம்மாவை சிவகங்கை தொகுதியிலும் நிறுத்தி 'சமாதானமாக' போவது என முடிவு செய்துவிட்டார்களாம்...

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தனிக்கட்சி நடத்தி வருகிறார். ஜி.கே.வாசன் வெளியேறிய நிலையில் தங்களது கை ஓங்கும் என ப.சிதம்பரம் தரப்பு எதிர்பார்த்தது. இதற்காக கலகக் குரல்களை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எழுப்பியும் பார்த்தார்.
கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைக்கும் இளங்கோவன் போனார். ஆனால் இளங்கோவனை டெல்லி செல்வாக்கால் ஜகா வாங்க வைத்தார் ப.சிதம்பரம்.
இந்த நிலையில் ப. சிதம்பரம் திடீரென காரைக்குடியில் தனி பொதுக்கூட்டத்தை கடந்த வாரம் நடத்தியிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ கூட்டம் அல்ல என்று இளங்கோவன் ஒதுக்கித் தள்ளி, கட்சியை விட்டு விலக நினைப்பவர்கள் வெளியேறட்டும் என வார்னிங்கும் கொடுத்தார்.
இந்தக் கூட்டத்தில்தான் சிதம்பரம் "என் காங்கிரஸ் பயணம் முடிவடைய இருக்கிறது" என உச் கொட்ட வைத்தார். அத்துடன் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குள் தமக்கு எதிரான தலைவராக இருந்த சுதர்சன நாச்சியப்பனை தமது கூட்டத்தில் பங்கேற்க செய்து அசத்தியிருக்கிறார் சிதம்பரம்.
இதில் பேசிய சுதர்சன நாச்சியப்பன், தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலை உள்ளது. ஆகையால் நாம் கட்சியில் உள்ள திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து இப்போதே வேட்பாளர் பட்டியல் தயார் செய்து பணியாற்றத் தொடங்க வேண்டும் என்றார்.
சுதர்சன நாச்சியப்பனின் இந்த அவசர வேண்டுகோளுக்கும் ப. சிதம்பரத்துடன் சமாதானமானதற்கும் பின்னணி என்ன தெரியுமா? என கண்மிசிட்டுகிறார்கள் கதர்சட்டையாளர்கள்.
ப.சிதம்பரத்தைப் பொறுத்தவரை எப்படியும் கார்த்தி சிதம்பரத்தை எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யாக்க வேண்டும் என்பதுதான் போராட்டம். லோக்சபா தேர்தலில் கார்த்தி கரை சேரவில்லை. 2016 சட்டசபை தேர்தலில் கார்த்தியை எப்படியாவது எம்.எல்.ஏ.வாக்கிவிடலாம் என துடிக்கிறார் சிதம்பரம்.
இதற்காகத்தான் சுதர்சன நாச்சியப்பனுடன் சமாதானமாக போக நினைத்தாராம் ப.சிதம்பரம். சட்டசபை தேர்தல் கார்த்தி சிதம்பரத்தை காரைக்குடி தொகுதியிலும் சுதர்சன நாச்சியப்பன் தன் மகன் ஜெயசிம்மாவை சிவகங்கை தொகுதியிலும் நிறுத்தி வைத்து வெற்றி பெற வைப்போம் எனவும் தூதுவிட்டாராம் ப.சி.
சுதர்சன நாச்சியப்பனும் இந்த டீல் நல்லா இருக்கே.. என்று கேட்டுக் கொண்டு ஓ.கே. சொன்ன கையோடு சிதம்பரம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு "இணைந்த கைகளாகிவிட்டோம்" என பிரகடனம் செய்திருக்கிறார்....
சிவகங்கை சீமையில் இணைந்த கைகளின் வாரிசுகள் வெல்வார்களா?












Click it and Unblock the Notifications