கைவிட்ட காற்றாலைகள்: தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், மழை பெய்து வருவதாலும், காற்றாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களில் குறைந்த அளவில் மின்சாரம் உற்பத்தியாவதாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அரங்கேறத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறையை சமாளிக்க, 2008 ஆம் ஆண்டு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை அமுல்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் தமிழகத்தின் காற்றாலைகள், வல்லூர், வட சென்னை, மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையங்களின் உற்பத்தித்திறன் பெருக்கப்பட்டு அவற்றின் மூலம் நாள்தோறும், 2,000 மெகாவாட் அளவிற்கு, கூடுதல் மின்சாரம் கிடைக்க வழி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆறு ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூன் மாதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மின்தடை அறிவிப்பு விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.
கைவிட்ட காற்றாலைகள்
காற்றாலைகளில், 2,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்த நிலையில், கடந்த சில தினங்களாக 200 - 250 மெகாவாட் மின்சாரம் மட்டும் கிடைகிறது.
மின் தடை
இதனிடையே காற்றாலைகளில் மின்சார உற்பத்தி குறைந்ததால் நேற்று 942 மெகாவாட் அளவிற்கு மின்தடை செய்யப்பட்டது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி காலம்
இம்மாத தொடக்கத்தில் இருந்தே அனல்மின்நிலையம், நீர்மின்சார நிலையம், டீசல் மின்சார நிலையம் ஆகியவற்றுடன், காற்றாலைகளும் ஓரளவு மின்சார உற்பத்தி செய்து வந்தது. பொதுவாக பீக்லோடு மாதமான ஜூன், ஜூலை ஆகஸ்டு மாதங்களில் தான் காற்றாலைகள் மின்சாரம் எதிர்பார்த்த அளவு 4 ஆயிரம் மெகாவாட் வரை உற்பத்தி செய்வது வழக்கம்.
குறைந்து போன காற்று
அதன்படி நடப்பாண்டு பீக் லோடு மாதங்களில் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. ஆனால் தற்போது ஆடி மாதம் நிறைவடைந்ததால் காற்று சீசன் குறைந்து காற்றாலைகளின் உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த ஒரு சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் மின்சாரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.
மின்தேவை
சராசரியாக 11 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் மின்சாரத்தின் தேவை இருந்து வருகிறது. நடப்பாண்டும் பீக்லோடு மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே காற்றாலைகள் எதிர்பார்த்த அளவு மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வந்தன. இதனால் மின்விநியோகத்தில் காற்றாலைகளும் தன்னுடைய பங்களிப்பை ஓரளவு செலுத்தி வந்தது.
மின்தடைக்குக் காரணம்
ஆனால் செவ்வாய்கிழமையன்று அதிகாலை 1.50 மணி நிலவரப்படி 263 மெகாவாட்டும், காலை 7.50 மணி நிலவரப்படி 40 மெகாவாட்டும் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் மொத்த உற்பத்தியும் 10,376 என்ற அளவில் குறைந்தது. இதனால் 942 மெகாவாட்டுக்கு மின்தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மின் உற்பத்தி நிலையங்களில்
அதேபோல், மத்திய அனல் மின் நிலையங்கள்; மின் வாரிய அனல் மின் நிலையங்களிலும், பழுது காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திடீரென ஏற்பட்ட மின் தேவையை சமாளிக்க முடியாததால், தற்போது மின்தடை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக எரிசக்தி துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்க வாய்ப்பு
இந்தநிலை தொடர வாய்ப்பில்லை. ஓரிரு நாட்களில் மீண்டும் காற்றாலைகள் மின்சார உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதிலும் குறிப்பாக பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 15-ந்தேதி வரை காற்றாலைகளால் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.