நெல்லையில் திடீர் மழை: மனம் குளிர்ந்த மக்கள்
நெல்லை: நெல்லையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் திடீரென புதன்கிழமை மாலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 3ம் தேதி முதல் வெயில் அவ்வப்போது சதமடித்து வருகிறது. இதனால் பகலில் மட்டுமின்றி இரவிலும் புழுக்கத்தால் மக்கள் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலை மாலை வரை நீடித்தது. இதனால் சூட்டின் தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. பின் மாலை 6 மணிக்கு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லையில் மாலை மழைக்கு முன்பு வெயில் 95 டிகிரி ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் வரும் மே 4ம் தேதி கத்தரி வெயில் ஆரம்பமாக உள்ளது. இது மே மாதம் 29ம் தேதி வரை நீடிக்கிறது. அந்த 26 நாட்களும் கோடை வெயில் உச்சநிலையை அடையும். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகபட்சமாக 110 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயிலை நினைத்து மக்கள் தற்போதே பயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications