ஜெயலலிதா கன்னத்தில் துளை இருந்தது ஏன்? எம்பாமிங் செய்த டாக்டர் சுதா சேஷய்யன் விளக்கம்
நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அதுதான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுத்த போட்டோவில் காணப்பட்டது.
சென்னை: சமூக வலைத்தளங்களில் வெளியானதை போல ஜெயலலிதாவின் முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை என்று சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து சென்னையில் நேற்று அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் உள்ளிட்டோர் பேட்டியளித்தனர். அப்போது ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டதா என்று நிருபர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்.
அப்போது, சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குநர் சுதா சேஷய்யன் அதற்கு பதிலளிப்பார் என அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பேட்டியளித்தார்.
இரவு அழைப்பு
அப்போது, அவர் கூறியதாவது: டிசம்பர் 5ம் தேதி இரவு 11.35 மணியளவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஜெயலலிதா உயிரிழந்து விட்டதாகவும்,
அவரின் உடலை பதப்படுத்துவதற்கான குழுவை அனுப்பும்படியும் இருவரும் கூறினர். அதனைத் தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றேன்.
பதப்படுத்தல்
பொதுவாக எங்களது குழுவினர் எப்போதுமே இதுபோன்ற அழைப்புகளை எதிர்பார்த்து தயாராக இருப்பது வழக்கம் என்பதால், நாங்கள் அப்பல்லோவுக்கு, விரைந்து சென்றுவிட்டோம். மருத்துவமனையில்தான் உடலை பதப்படுத்துவதற்கான பார்மலின் திரவத்தைக் கலந்து தயாரித்தோம். அதன் பின்னர் பதப்படுத்துவதற்கான திரவம் ரத்தக் குழாய்களில் நிரப்பப்பட்டது. இதற்காக, ஜெயலலிதா உடலின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது.
சேதமடையவில்லை
பதப்படுத்துவதற்கான செய்முறைக்கு முன்பாக உடலை ஆராய்ந்தேன். ஜெயலலிதா உடலில் திசுக்கள் எதுவும் சேதமடையவில்லை.
அவரது உதடுகளிலும், மூக்கில் மட்டுமே ஓரிரு திரவ துளிகள் வெளியேறின. நீண்ட நாள் சிகிச்சை, படுக்கையில் இருந்ததால், அவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அதுதான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுத்த போட்டோவில் காணப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியானது போன்று அவரது முகத்தில் பெரிய அளவிலான துளைகள் எதுவும் இல்லை.
உதடு தடித்தது ஏன்
ஜெயலலிதாவை நீண்ட நாட்கள் பார்த்தவர்களால் ஒரு வித்தியாசத்தை உணர முடியும். அவரது உதடு தடித்து காணப்பட்டது. டிரக்யாஸ்டமி எனப்படும் கழுத்தில் துளையிட்டு சுவாச காற்று கொடுத்து, சிகிச்சை பெற்றவர்களின் உதடுகள் தடித்து காணப்படும் என்பதால்தான் அவ்வாறு அவரது உதடுகள் தடித்து காணப்பட்டன.
பதப்படுத்த காரணம்
முக்கிய நபர்கள் இறந்து, அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும்போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கவும், அஞ்சலி செலுத்த வருவோருக்கு துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். எனவேதான் ஜெயலலிதாவுக்கும் உடல் பதப்படுத்தப்பட்டது. 5ம் தேதி இரவு முதல் 6ம் தேதி அதிகாலை அவரது உடல் போயஸ் கார்டன் கொண்டு செல்லும் நேரத்திற்குள் இந்த நடைமுறைகள் நடந்து முடிந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆருக்கும் செய்தார்கள்
அப்போது நிருபர் ஒருவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் போன்ற வி.ஐ.பிகளின் உடல் சாதாரண முறையில்தானே அடக்கம் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். ஆனால் இதை மறுத்த சுதா சேஷய்யன், எம்.ஜி.ஆர் உடலுக்கும் பதப்படுத்தல் நடந்தது என்றார். மேலும், உடலும் இதே வகையில்தான் பதப்படுத்தப்பட்டது என்றார். சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் நிபுணர்கள்தான் அதை அப்போதும் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.