தலித் பூசாரி தற்கொலை வழக்கு… ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு ஜாமீன்
தேனி: தலித் பூசாரி நாகமுத்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கைலாசநாதர் கோவில் சீரமைப்பு பணிகள், பெரியகுளம் நகராட்சி தலைவரும், அமைச்சர் ஓ.பி.எஸ்., சகோதரருமான ராஜா தலைமையில் நடைபெற்றது. பூசாரி நாகமுத்துவுக்கு கடைகள் ஒதுக்கித் தருவதாக ராஜா உறுதியளித்தார். இதை நம்பிய நாகமுத்து பணத்தை செலவு செய்து கடைகளுக்கான பணிகளை செய்துள்ளார். ஆனால் ராஜா கடைகளை ஒதுக்கவில்லையாம். இதில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மிரட்டியதாகவும் ராஜா உட்பட, கோவில் நிர்வாகிகள் மீது கடந்த, 2012, மே, 5ம் தேதி, நாகமுத்து, தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரை வாபஸ் பெறச்சொல்லி நாகமுத்துவுக்கு நெருக்கடி எழுந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
நாகமுத்துவுக்கு ஆதரவாக, 'எவிடன்ஸ்' அமைப்பைச் சேர்ந்த கதிர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த, 2012 செப்டம்பர் 2ம்தேதி, கோவில் நிர்வாகிகள் பழனிச்சாமி, வெங்கிடசாமி மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

பூசாரி தற்கொலை
இந்தநிலையில் பூசாரி நாகமுத்து கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ஓ.பி.எஸ் சகோதரர் ராஜாவும் கோவில் நிர்வாகிகளும்தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது.

தொடர் போராட்டம்
இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகமுத்துவின் உடலுடன் 5 நாட்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராஜா உட்பட, ஏழு பேர் மீதும், போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இதில் எழுந்த நெருக்கடி காரணமாக, போலீசார், பெரியகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 4ம் தேதி அவசர அவசரமாக, , குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 'குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், வரும், 26ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார்.

வழக்குப் பதிவு
நாகமுத்துவை, தற்கொலைக்கு துாண்டியதாக, ராஜா மீது, முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையில் நாகமுத்துவை தாக்கியது; கொடுங்காயம் ஏற்படுத்தியது; பொதுப்பணியில் இருந்து கொண்டு, மக்களுக்கு துன்பம் விளைவித்தது' போன்ற பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவை நிரூபிக்கப்பட்டால், ராஜாவுக்கு ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் சரண்
தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் மட்டும், ராஜா முன்ஜாமீன் பெற்றுள்ளதால் மற்ற பிரிவுகளில் பெறவில்லை. விரைவில் ராஜா கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலையில் சரண் அடைந்த ராஜா ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்

ஜாமீன் கிடைத்தது
அதன் மீதான விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, ராஜாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். தற்கொலை செய்து கொண்ட நாகமுத்து குடும்பத்தின் தரப்பில் ஆஜரான தண்டபாணியும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. இதில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓ.ராஜாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications