விருத்தாசலம் அருகே பரபரப்பு.. குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை
விருத்தாசலம்: விருத்தாச்சலம் அருகே குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தை சேர்தவர் வீரமணி (25). விவசாய கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்று வருவதாக தனது ஒரு வயது மகளுடன் சென்றார்.
இரவு வெகு நேரமாகியும் வீரமணி வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுபாஷினி. வீரமணியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சுபாஷினி தனது கணவரை காணவில்லை என புகார் செய்தார்.
இந்நிலையில் விருத்தாசலம் மேற்கிருப்புகிராமத்தில் ராஜேந்திரன் என்பவரின் முந்திரி வயலில் ஒரு வாலிபரும் குழந்தையும் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்களம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சப் இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில். இறந்தது வீரமணி மற்றும் அவரது குழந்தை என்பது தெரியவந்தது. தொடர்ந்து 2 சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுபாஷினி ஊமங்களம் போலீசில் புகார் செய்தார். அதில் நானும் எனது கணவர் வீரமணியும் காதலித்து கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம் .
இந்நிலையில் கடந்த சில நாட்களாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நான், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்துக் கொண்டிருந்த போது முந்திரி தோப்பில் தனது கணவர் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது எனக் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்