கோடைக்கு முன்பே தகிக்கும் வெயில்!… அக்னியில் 110 டிகிரியை தாண்டும்!!
சென்னை: குளிர்காலம் முடிந்து இன்னும் சில தினங்கள் கூட முடியவில்லை பங்குனி மாத வெயிலைப் போல பட்டையைக் கிளப்புகிறது. இரவில் புழுக்கம் தாங்க முடியவில்லை.
சென்னை, வேலூர், தொடங்கி தென் மாவட்டங்களில் கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.
இப்போதே இப்படி எனில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் அளவு 109 முதல் 111 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பமே அனல்
கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. பொதுவாக குளிர் காலத்துக்கும், கோடைக்கும் இடைப் பட்ட நாட்களில் லேசான வெயில் அடிக்கும். இந்த வெயில் இதமாக இருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது கோடை காலத்தைப்போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மதுரையில் கொளுத்துது
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதுரையில் நேற்று 36.2 டிகிரி செல்சியஸ் (97.16 ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது.
இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இன்று நாக்பூரில் பலத்த மழை பெய்துள்ளது. பருவ நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. என்று பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கே.முத்துச்செழியன் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளில்
10 ஆண்டுக்கு முன்பு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மதுரையின் அதிகபட்ச வெயில் அளவு 80 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இது 89.6 டிகிரியாக உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் 107 டிகிரி வெயில் அடிக்கும். ஆனால் இப்போதைய அக்னி நட்சத்திர காலத்தில் 110 டிகிரியை எட்டும் என்று கூறப்படுகிறது.
மார்ச் மாத வெயில்
பொதுவாக மார்ச் 15-க்கு பிறகுதான் கோடை தொடங்கும். தற்போது மார்ச் முதல் தேதியிலே வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தில் வெயில் அளவு 109 முதல் 111 டிகிரியை தாண்டக்கூடும் என்றும் முன்னாள் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
தர்பூசணி வரத்து
கோடைக்க முன்னதாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுவதால் வெயிலில் இருந்து தங்களை காப்பற்றி கொள்ள பொது மக்கள் பெரிதும் நாடுவது தர்பூசணிப் பழத்தை தான். தற்பொழுது சேலத்தில் கடைவீதிகளில் தர்பூசணியின் வரத்து அதிகமாகவே உள்ளது.
சீசன் துவங்குவதற்கு முன்பே அதிகளவில் பழங்கள் வருவதாகவும், தினசரி 150 முதல் 200 டன் வரை சேலம் சந்தைக்கு வருதாகவும் தர்பூசணி மொத்த வியாபாரி கூறுகிறார்கள். வெயிலின் தாக்கத்தால் சாலையோரக் கடைகளில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
மருத்துவ குணம்
தர்பூசணி பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளதால், இருதய நோயாளிகளும், சர்க்கரை நோயாளிகளும் கூட வெயில் காலத்தில் அதனை தயக்கமின்றி சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோடையை சமாளிக்க இப்போதே தயாராகுங்கள் மக்களே!