கூகுள், மைக்ரோசாப்ட், பெப்சி, அடோப், மாஸ்டர்கார்டு: கலக்கும் இந்தியர்கள்
சென்னை: கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பது நம் நாட்டிற்கு பெருமையான விஷயம்.
கூகுள் நிறுவன சிஇஓவாக இருந்த லாரி பேஜ் ஆல்ஃபபெட் நிறுவன தலைவராகியுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவன தலைவராக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூகுள் மட்டும் அல்ல மைக்ரோசாப்ட், பெப்சி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை
வார்டனில் எம்.பி.ஏ. படித்துள்ள சுந்தர் பிச்சை ஆன்ட்ராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மூளையாக செயல்பட்டவர். சுந்தர் போன்று திறமையானவர் கூகுளின் தலைவராகியிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டவசமானது என முன்னாள் சிஇஓ லாரி பேஜ் தெரிவித்துள்ளார்.

சத்யா நாதெல்லா
ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா(47) மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

சாந்தனு நாராயண்
ஹைதராபாத்தில் பிறந்த சாந்தனு நாராயண் அடோப் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அவர் ஆப்பிள், சிலிகான் கிராபிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் வேலை செய்தவர். மேலும் அவர் பித்ரா இன்க் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார்.

இந்திரா நூயி
பெப்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளவர் இந்திரா நூயி. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் உலகின் 100 அதிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நூயி தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.

அஜய்பால் சிங் பங்கா
ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த அஜய்பால் சிங் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். அவர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து அந்நிறுவன சிஇஓவாக உள்ளார். வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான அதிபரின் ஆலோசனை குழுவில் பங்காவை இந்த ஆண்டு துவக்கத்தில் உறுப்பினாராக்கினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.











Click it and Unblock the Notifications