சட்டசபை அமளி: 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மேலும் 10 நாட்கள் சஸ்பென்ட்! எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின் போது அமளியில் ஈடுபட்டதாக கூறி சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மேலும் 10 நாட்கள் கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தே.மு.தி.கவைச் சேர்ந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதற்கு எதிராக பதிலுக்கு தே.மு.தி.க. உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதன் காரணமாக சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனால், மோகன்ராஜை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார். இதைக் கண்டித்து தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி வேகமாக சென்றனர். அவர்களை சபை காவலர்கள் தடுத்தபோது இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகரையும் சபை காவலரையும் தாக்க முயன்றதால் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களான மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகியோர் அந்த கூட்டத்தொடர் மற்றும் தற்போதைய கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதித்ததுடன் இப்பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் சபாநாயகர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து உரிமைக் குழு ஆராய்ந்து முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது.
இதனிடையே தற்போதைய கூட்டத் தொடரில் தங்களை அனுமதிக்க கோரி நடவடிக்கைக்குள்ளான ஆகியோர் சட்டசபை வளாகத்திலேயே தர்ணா போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் சட்டசபையில் உரிமைக் குழுவின் முடிவை சபை முன்னவரான அமைச்சர் நத்தம் விஸ்வதநாதன் அறிவித்தார். அதாவது தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேரும் சட்டசபை கூட்டத்தொடரில் மேலும் 10 நாட்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது; இது அடுத்த கூட்டத் தொடருக்கும் பொருந்தும் என்பது உரிமைக் குழுவின் முடிவு.
இந்த முடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவுக்கு சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. குழு தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முடிவு சர்வாதிகாரமானது என்று சாடினார்.












Click it and Unblock the Notifications