தூக்கி எறிவதற்கு முன் நீங்களாகவே தே.ஜ.கூ.வை விட்டு வெளியேறி விடுங்கள்.. வைகோவை எச்சரிக்கும் சாமி!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு தூக்கி எறிவதற்கு முன்பு, வைகோ அவராகவே வெளியேறி விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வைகோ குறித்து ஒரு டிவிட் போட்டுள்ளார். அதேபோல ஜெயலலிதாவையும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் மிரட்டும் இன்னொரு டிவிட்டையும் அவர் போட்டுள்ளார்.
வைகோ குறித்த டிவிட்டில், வைகோவுக்கு எனது செய்தி: தூக்கி எறியப்படுவதற்கு முன்பு நீங்களாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி விடுங்கள். இதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்ததே என்று கூறியுள்ளார் சாமி.
இதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்து இன்னொரு டிவிட் போட்டுள்ளார் சாமி. அதில் அவர் கூறியிருப்பதாவது:
பன்னீர், உடனடியாக எச்.ராஜா வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் மதிமுக தொண்டர்களைக் கைது செய்யுங்கள். இல்லாவிட்டால், ஜெயலலிதாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி நான் சுப்ரீம் கோர்ட்டை நாடுவேன் என்று எச்சரித்துள்ளார் சாமி.