10 நாட்களுக்கு முன்பே சுவாதியின் கன்னத்தில் அறைந்த கொலைகாரன்... பரபரப்பு சாட்சி
சென்னை: சுவாதியை கொன்ற கொலையாளிதான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே ரயில் நிலைய பிளாட்பாரத்தில் சுவாதியின் கன்னத்தில் அறைந்தவன் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன். சுவாதி கொலை நடந்த போது நேரில் பார்க்காவிட்டாலும் கொலைகாரன் தப்பி ஓடியதை நேரில் பார்த்தவர் தற்போது சாட்சி கூற முன் வந்துள்ளார்.
தனியார் நிறுவன ஊழியரான இவர், சுவாதியை கொன்றவனை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் வழக்கமாக நான் தினமும் காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்து ரயிலைப் பிடித்து வேலைக்குச் செல்வேன்.
என்னைப் போலவே, இளம் வயதுப் பெண் ஒருவர் அதே நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார். பத்து நாட்களுக்கு முன்பு, நுங்கம்பாக்கம் நிலைய பிளாட்பாரத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அப்போது ஒரு வாலிபர் அந்தப் பெண்ணுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் கன்னத்தில் அவர் மாறி மாறி அறைந்தார். அதற்கு அந்தப்பெண் ஏனோ, எதிர்ப்புக் காட்டவில்லை. கொலை நடந்த நாளன்று அதே வாலிபர், நான் நின்று கொண்டிருந்த நடை மேடையில் வேகமாக ஒடியதை பார்த்தேன். அவரை சிலர் விரட்டிக் கொண்டு ஒடினர்.
அந்த வாலிபர்தான் அன்று அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கன்னத்தில் அறைந்த வாலிபர் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. நானும் அந்த வாலிபரை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அதற்குள் அவன் ஓடிவிட்டான். பிளாட்பாரத்தில் கும்பல் கூடியிருந்த இடத்திற்கு ஒடிவந்து பார்த்தபோது, அங்கே அந்தப் பெண் கழுத்திலும், முகத்திலும் ரத்தம் வழிந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
அந்தப்பெண்தான், அந்த வாலிபரிடம் ஏற்கனவே கன்னத்தில் அறை வாங்கிய அதே பெண் என்பதைப் புரிந்துகொண்டேன். பிறகு, பத்திரிகை செய்திகளில் அந்த பெண்ணின் பெயர் சுவாதி என்று அறிந்தேன். நான் வசிக்கும் சூளைமேடு ஏரியாவில்தான் குடியிருந்தவர் என்பதைக் கேள்விப்பட்ட போது, அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார் தமிழ்ச்செல்வன்.
சுவாதி கொலை செய்யப்பட்ட போது அந்த சம்பவத்தை நேரில் பார்த்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் இருவர் மட்டுமே சாட்சி கூறியுள்ளனர். கொலைச் சம்பவத்தை நேரில் பார்க்கா விட்டாலும், கடந்த வாரங்களில் நடந்த நிகழ்வுகளை கூறி சூளைமேடு தமிழ்ச்செல்வன், சாட்சியாகப் பேசத் தொடங்கியிருப்பது இந்த வழக்குக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்கின்றனர் போலீசார்.
கடந்த 10ம் தேதியும் 11ம் தேதியும் மர்மநபர் தன்னை பின்தொடர்வதாக தோழி, நண்பர்களிடம் கூறிய சுவாதி, பொது இடத்தில் தன் கன்னத்தில் ஒருவர் அறைந்த விசயத்தை எப்படி தன் தோழிகளிடம் கூறாமல் விட்டிருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.