பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 743 ஆக உயர்வு; தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண் பலி
சென்னை: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலுக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் 11,955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 743 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
இந்தியாவின் வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிக வேகமாக பரவியபடி உள்ளது. ஆந்திரா, தெலங்கானா, மாநிலங்களிலும் பன்றிக்காய்ச்சல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
743 பேர் பலி
பன்றிக்காய்ச்சலால், இதுவரை 743 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில், 4,185 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானார்.
ராஜஸ்தானில்
ராஜஸ்தானில் மட்டும் இதுவரை 206 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்ததாக, குஜராத்தில், 180 பேரும், மத்திய பிரதேசத்தில், 99 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
தெலுங்கானாவில் பலி
டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த, சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ள, தெலுங்கானா மாநிலத்தில், 1,186 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவற்றில், 49 பேர் மரணமடைந்துள்ளனர்.
கர்ப்பிணி பாதிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்தவர் 27 வயதான கெளரி. இவருக்கும் திண்டிவனம் கிடங்கள் பகுதியை சேர்ந்த முரளிதரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியாக உள்ள கெளரி, கடந்த சில மாதங்களாக கடுமையான ஜுரம் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
புதுச்சேரியில் பலி
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு, கெளரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை கடந்த 19 ஆம் தேதி உறுதி செய்திருக்கின்றனர். அதை தொடர்ந்து கெளரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் 9 பேர் பலி
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் அதிக அளவில் பரவாமல் இருந்தது. இந்நோய்க்கு 8 பேர் மட்டுமே பலியாகி இருந்தனர். இந்நிலையில், இந்த மரணத்தை சேர்த்து, தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும்
சுமார் 11,955 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நடா தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முகக் கவசங்கள் மற்றும் தடுப்பு மருந்துகள் அனைத்து மாநிலங்களுக்கும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுவதாகவும், மருந்துப் பொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என்றும், போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் என்ன
சாதாரண காய்ச்சலில் துவங்கி, தலைவலி, இருமல், ஜலதோஷம், உடல் சோர்வு, வயிற்று வலி, வாந்தி, பேதி உள்ளிட்டவை ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படும்.
அச்சப்பட வேண்டாம்
தொண்டை கரகரப்புடன் கூடிய காய்ச்சல் அல்லது இருமல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். பன்றிக்காய்ச்சல் வந்து விட்டால் அச்சப்பட தேவையில்லை. நோய் பாதித்தவருடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும்.
நன்றாக சோப்பு போட்டு கை கழுவுதல், முகக் கவசங்கள் அணிதல், போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மற்றவர் இருமும் போதும், தும்மும் போதும் பாதுகாப்புடன் இருத்தல் அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.