விவசாயிகள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் நடனம் ஆடுகிறது ஆளும் கட்சி.... டி கே ரங்கராஜன் ஆவேசம்
விவசாயிகள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் ஆளும் கட்சி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது என்று சிபிஎம் மூத்த தலைவர் டி கே ரங்கராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் 31 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று திடீரென்று கத்திப்பாரா மேம்பாலத்தை சங்கிலியால் பூட்டு போட்டு மறியல் போராட்டத்தில் இளைஞர்கள் மாணவர்கள் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த மேம்பாலத்தை பூட்டுப் போடும் போராட்டம் குறித்து சிபிஎம் மூத்த தலைவர் டி கே ரங்கராஜன் கூறியதாவது:
தன்னெழுச்சி
விவசாயிகளின் போராட்டத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் இப்படித்தான் தன்னெழுச்சியாக போராடுவார்கள். எனவே, விவசாயிகள் பிரச்சனை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.
போர்க்கால நடவடிக்கை
தமிழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் வறட்சி காணப்படுகிறது. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
விவசாயிகள் பிரச்சனை குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்துக் கட்சி சார்பில் அனைவரும் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் நிர்பந்தம் செய்ய வேண்டும்.
தமிழக அரசு
விவசாயிகள் பிரச்சனையில் நேரடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும். ஓராண்டு விவசாயம் பாதித்தால் 2 ஆண்டுகள் வரை மற்ற தொழில்களும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். ஆளும் கட்சி இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது என்று டி கே ரங்கராஜன் கூறினார்.