முதல்வர் பன்னீர்செல்வத்தை மீறி அதிகார மையம் செயல்படுகிறது.. டி.ராஜேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு
பன்னீர்செல்வம் நிஜ முதல்வர் என்றால், இடையில் புகுந்து விளையாடியது யார்? பன்னீர்செல்வத்தை ஆழ்மனதில் இருந்து பாராட்ட வேண்டும் என்றால், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று டி.ர
சென்னை: மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை வைத்து பார்க்கும்போது, முதல்வர் பன்னீர்செல்வத்தை மீறி ஒரு அதிகார மையம் உருவாகியுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் குற்றம் சாட்டினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராஜேந்தர் தனது வழக்கமான ஸ்டைலில் பேட்டியளித்தார். ராஜேந்தர் அப்போது கூறியதாவது:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி பிரதமர் மோடியை, முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் சந்தித்தார். மோடியும் உரிய உதவிகளை செய்து அனைத்து துறை ஒப்புதலையும் உடனே பெற வழி செய்தார். பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

உட்கட்சி பூசல்
ஆனால், பன்னீர்செல்வம் மோடியை சந்தித்த உடனேயே அதிமுக எம்.பி. தம்பிதுரை, எம்.பிக்களுடன் சென்று மோடியை சந்திக்க முயன்றார். ஆனால் அனுமதி தரப்படவில்லை. ஒருவேளை மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மோடியை சந்தித்திருந்தால், அதே நாளில் தம்பிதுரை எம்.பிக்களோடு மோடியை சந்தித்தித்திருக்க சென்றிருப்பாரா? இதிலேயே தெரிகிறது, அவர்களுக்குள்ளேயே இருக்கிறது உட்கட்சி பூசல். கட்சிக்குள்ளேயே இருக்கிறது கீறல். அதனால்தான் நடந்துள்ளது காவல்துறை அத்துமீறல்.

நிஜ முதல்வர்
ஜல்லிக்கட்டுக்காக போராடிய, மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு போருக்கு பிறகு, மாணவர்கள் திரண்டது இப்போதுதான். சட்டசபையில் முதல்வரே கூறுகிறார் மாணவர்கள் அறவழி போராட்டம்தான் நடத்தினர் என்று. அப்படியிருக்கும்போது, அவர்கள் மீது தடியடி நடந்தது ஏன். பன்னீர்செல்வம் நிஜ முதல்வர் என்றால், இடையில் புகுந்து விளையாடியது யார்? பன்னீர்செல்வத்தை ஆழ்மனதில் இருந்து பாராட்ட வேண்டும் என்றால், மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்.

அதிகார மையம் என ஐயம்
அரசாங்கம், நடுக்குப்பம் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது. பாதிக்கப்பட்டது மாணவர்கள். பதைபதைத்து ஓடி வந்து காப்பாற்றியது மீனவர்கள். அதிமுகவில் புதிதாக புகுந்துள்ளதோ அதிகார மையம். உருவாகியுள்ளது ஐயம். ஜனநாயகத்தில் ஊடகமும் ஒரு தூண்தானே. நீங்களே அந்த அதிகார மையம் யார் என்பதை கண்டறியுங்கள்.

எதிர்க்கட்சிகள் மவுனம்
74 நாட்கள் அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா இதுவரை ஜெயலலிதா உடல்நலம் குறித்து கட்சி தொண்டர்களுக்கே உண்மையை தெரிவிக்கவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதுவரை ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளையறிக்கை கேட்ட கட்சியினர், இப்போது வெள்ளையறிக்கை ஏன் கேட்கவில்லை. மறைமுக உடன்படிக்கை போட்டுக்கொண்டுதான் கட்சிகள் செயல்படுகின்றன.

பொன்.ராதாகிருஷ்ணன் செயல்பாடு
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகத்தில் என்ன நடந்தது என்று பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடிக்கு தெரிவித்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் மோடி முதலிலேயே ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்த்து வைத்திருப்பார். மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்துவிட்டார். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications