செம்மொழி அந்தஸ்தை அடைவதற்கு தமிழ் மொழி கடந்து வந்த பாதை!
2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி தமிழை செம்மொழியாக அறிவித்து அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
சென்னை : தமிழ் மொழி உலக செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நாள் இன்று. 2004ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
தமிழ் மொழி உலகச் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று. இந்த பெருமையை அடைய தமிழ் மொழி பல்வேறு பாதைகளில் பயணித்து வந்து இருக்கிறது.
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை அடைய பல்வேறு தமிழ் அறிஞர்கள் குரல் கொடுத்துள்ளனர். அதே நேரம் பல்வேறு தமிழ் மாநாடுகளில் அதற்கான தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.

கால்டுவெல் பிரகடனம்
கி.பி. 1856ல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிஞர் கால்டுவெல் பிரகடனம் செய்தார். அதே நேரம் ‘தமிழ் செம்மொழியே' என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மு.சு.பூரணலிங்கம் பிள்ளை உரையாற்றினார். 1902ல் தமிழ் செம்மொழி என்கிற கட்டுரையை பரிதிமாற் கலைஞர் எழுதினார்.

மறைமலை அடிகள் தீர்மானம்
1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி மறைமலை அடிகள் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது. 1919-1920ல் கரந்தையில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி கோரிக்கை தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு, 1988ல் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழை செம்மொழியாக்க அறிஞர்கள் தீர்மானம் இயற்றினர்.

உலகத் தமிழ் மாநாடுகள்
1995ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டில் தமிழை செம்மொழியாக்க அறிவிக்கக்கோரியும், 1998ல் தமிழை செம்மொழியாக்க ஏற்க வலியுறுத்தியும் சென்னை பல்கலைக்கழகத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அதேபோல், 1998 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த தமிழ் மாநாடுகளிலும் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் இயற்றப்பட்டது.

செம்மொழி நாள்
தமிழறிஞர்களின் தொடர் முன்னெடுப்புகளால், 2004ம் ஆண்டு ஜுன்ன் 6ம் தேதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு அக்டோபர் 12ல் செம்மொழிக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனால், அந்நாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது. 2010ம் ஆண்டு கோவையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications