கூட்டணிக்கு சிக்னல் கொடுக்கும் வாசன்.. கண்டுகொள்ளாத கார்டன்
சென்னை: ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, வரும் சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவதை அவர்களின் செயல்பாடு பட்டவர்த்தனமாக காண்பித்து வருகிறது.
காங்கிரசில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் ஜி.கே.வாசன். கட்சி தொடங்கியது முதலே அதிமுகவுடன் நெருக்கம் காட்டிவருகிறார்.
தமிழக மக்களின் வாழ்வுரிமை தொடர்பான பல பிரச்சினைகளில், அது, அதிமுக அரசோடு சம்மந்தப்பட்டிருந்தால் வெறும் அறிக்கைவிடுவதோடு நிறுத்திக்கொள்கிறார் வாசன். மத்திய அரசோடு சம்மந்தப்பட்ட பிரச்சினை என்றால்தான் உக்கிரமாக மாறிவிடுகிறார்.
மீனவர்களுக்காக போராட்டம்
உதாரணத்திற்கு, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே 18ம் தேதி ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா வினர் போராட்டம் நடத்தினர்.
காலம் கடந்தது
ஆனால் பொங்கலுக்கு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் பொங்கல் முடிந்த பிறகு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தங்கள் கட்சி உயிர்ப்போடு உள்ளது என்பதை காண்பிக்க நடைபெற்றதை போன்றுதான் இருந்தது என்கிறார்கள் அக்கட்சியிலுள்ள சிலர்.
தமிழக அரசு பற்றி மூச்
தமிழக அரசு வெள்ள சேதத்தை கையாண்ட விதம், மற்றும் நிவாரண முறைகேடு பற்றியெல்லாம், போராடாத வாசன் கட்சி, விடுதலை செய்யப்பட்ட பிறகு, மீனவர் பிரச்சினைக்காக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
காத்திருப்பு
வாசன் தரப்பு என்னதான் சிக்னல் கொடுத்தாலும், கார்டன் தரப்பு இன்னும் கண் அசைக்கவில்லை. எனவே சமத்துவ மக்கள் கட்சி வரிசையில், தமிழ் மாநில காங்கிரசும் காத்திருப்போர் பட்டியலில் இணைந்துள்ளதாக கூறுகிறார்கள் விவரமறிந்தோர்.