பெங்களூர் தமிழர்கள் மீதான தாக்குதலில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு: சென்னையில் 40 அமைப்புகள் முற்றுகை!
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலை ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் கட்டவிழ்த்துவிட்டதாக குற்றம்சாட்டி அந்த அமைப்பின் சென்னை தலைமையகத்தை பெரியார் அமைப்புகள், தமிழர் இயக்கங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.
காவிரி பிரச்சனையை காரணம்காட்டி கர்நாடகாவில் தமிழருக்கு எதிராக மிகப் பெரிய வன்முறை நிகழ்த்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட லாரிகள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டனர். தமிழரின் சொத்துகள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

இந்த வன்முறைக்கு காரணமே இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் என்று கர்நாடகா அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதனால் தமிழருக்கு எதிராக செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பது பெரியார் அமைப்புகள், தமிழர் இயக்கங்களின் கோரிக்கை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை 40க்கும் மேற்பட்ட அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜகவின் ஹெச். ராஜா, நடிகர்கள் ஒய்ஜி மகேந்திரன், எஸ்வி சேகர் உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலர் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 325 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications