ஐ.நா.வில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி!!
சென்னை: ஐ.நா.வில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் தலைமையில் சென்னையில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.
சென்னையில் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஐ.நா.வில் ராஜபக்சே பேசக் கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன் மூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தாளமுத்து நடராசன் மாளிகை வரை இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியால் எழும்பூர், சென்ட்ரல், அண்ணா சாலை பகுதிகளில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.