ஜெ. மீண்டும் முதல்வரான பின் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் ... ஆக. 24ல் தொடங்குகிறது
சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் முதலாவது சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது. அப்போது முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.
சட்டசபையில் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மானியக் கோரிக்கை விவாதம்..
பொதுவாக பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை எடுத்து கொள்ளப்படுவது வழக்கம். இதில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் விரிவாக பதிலளித்து பேசுவார். சுமார் 1 மாதம் இந்த கூட்டம் நடைபெறும். ஆனால் கடந்த மார்ச் மாததத்துக்குப் பின்னர் சட்டசபை கூட்டம் கூட்டப்படவே இல்லை.

மே மாத எதிர்பார்ப்பு
இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலையான ஜெயலலிதா, மே 23-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது உடனடியாக சட்டசபை கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டப்படவில்லை.

ஆர்.கே.நகர் தேர்தல்
இதன் பின்னர் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். இதனைத் தொடர்ந்தும் சட்டசபை கூட்டப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபை கூட்டப்படவில்லை.

40 நாட்களாகியும்..
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவடைந்து 40 நாட்களுக்கு மேலாகியும் சட்டசபையை கூட்டாதது ஏன்? மானியக் கோரிக்கைகள் என்னவாயிற்று? எப்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படும்? என்று எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வந்தன.

ஹைகோர்ட்டில் உறுதிமொழி
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மலிவுவாக்கம் கட்டிட விபத்து குறித்த விசாரணை அறிக்கை ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டசபை கூடுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆக. 24-ல் கூடுகிறது
இந்நிலையில் இன்று சட்டசபை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 24-ந் தேதியன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications