ஸ்டாலின் பயத்தால்.. அடித்துப் பிடித்துக் கொண்டு அடுத்த மாதம் கூடும் சட்டசபை!
வரும் ஜூன் மாதம் 7 அல்லது 8ம் தேதி தமிழக சட்டசபை கூடவுள்ளது என்றும், அந்தக் கூட்ட தொடரில் பல முக்கிய புதிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படவுள்ளது என்றும் கவர்னர் மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.
சென்னை: அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்கவுள்ளது. மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 16ம் தேதி மீண்டும் கூடிய தமிழக சட்டசபையில், 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் அதே மாதம் 20ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது.
அன்றே சட்டசபையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எப்போது சட்டசபைக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்தது.
ஒத்தி வைப்பு
ஏப்ரல் 10ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த புகாரால் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.
சபையைக் கூட்ட திமுக வலியுறுத்தல்
அதனைத் தொடர்ந்து, சட்ட சபையை உடனே கூட்டி, குடிநீர் பிரச்சினை, வறட்சி, ‘நீட்' தேர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
கூடுகிறது சட்டசபை
இந்த நிலையில், தமிழக சட்டசபையை மீண்டும் கூட்ட ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று தெரிகிறது. ஜூன் 7 அல்லது 8-ம் தேதியில் கூட்டம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருமாதம் நடக்கிறது சட்டசபை
சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை கவர்னர் வித்யாசாகர் ராவ் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு மசோதா
இந்த சட்டசபை கூட்டத்தொடரில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
முதல்வர் ஆலோசனை
நாளை முதல் துறை வாரியாக அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். இதில் துறைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.