தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பேருக்கு ஆடுகள்- கூவத்தை சீரமைக்க ரூ3,834 கோடி!!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் சென்னை கூவம் நதியை சீரமைக்க ரூ3,834 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பாண்டில் 1.5 லட்சம் பேருக்கு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் 2014-15க்கான பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:
சென்னையில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் 337 இடங்களில் கலக்கின்றன. அதில் 179 இடங்களில் தடுத்து, இந்த ஆறுகளைச் சீரமைப்பதற்காக ரூ.150 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் 2015-ல் முடிவடையும். ரூ.163 கோடி செலவில் 2014-2015 ஆண்டில் மீதமுள்ள 158 இடங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.

கூவம் நதி மீட்க..
கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். மொத்தம் ரூ.3,833.62 கோடி மதிப்பீட்டிலான இந்தப் பெரும் திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை
பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மறுகுடியமர்வு செய்யவும் ரூ.2,077.29 கோடி செலவிடப்படும். இத்திட்டத்தை ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை' ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக 2014-2015 ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆடு- மாடுகள் வழங்க..
மேலும் 1.5 லட்சம் பேருக்கு விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்க 198.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருமண உதவித் திட்டத்துக்கு..
2014-2015-ம் ஆண்டில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ204 கோடிக்கு திருமாங்கல்ய தங்க நாணயம்
இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக் காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications